இந்திய இரத்தம்
சில வருடங்களுக்கு முன், என் நண்பனுக்கு அமெரிக்காவில் நேர்ந்த ஓர் அனுவம் தான் இக்கட்டுரை!
என் நண்பன் சமூக நல விரும்பி! ‘ஊரைக் காப்பாற்றுவேன், நாட்டைக் காப்பாற்றுவேன்’ என்று சதா சொல்லி கொண்டிருப்பவன். வேலை நிமித்தமாக, அமெரிக்காவில் வசித்தாலும் இந்திய இரத்தம், இந்திய உணர்வு என்றிருப்பவன். பாரதியின் பேரன் என்று மனதில் நினைப்பு! நல்லது தான், தவறில்லை. அநியாயங்களைக் கண்டால் அவன் இரத்தம் கொதிக்கும். சாதரணமாகவே இரத்தம் கொதிப்பது நன்றன்று. போதாத குறைக்கு, இவன் இரத்தம் ‘O -ve’ வேறு. கேட்கவே வேண்டாம். அரிய வகை!
நாங்கள் அப்போது ஸால்ட் லேக் சிட்டியில் (யூட்டா மாகாணம்) வசித்துக் கொண்டிருந்தோம். ஒரு நாள் வெள்ளிக்கிழமை, நாங்கள் வழக்கம் போல் அலுவலகம் சென்றிருந்தோம். அன்று காலை ஒரு மின்னஞ்சல் வந்தது. ஸால்ட் லேக் சிட்டி ரோட்டரி சங்கமோ, லாட்டரி சங்கமோ அந்த இரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்து அழைப்பு விடுத்திருந்தது.
நண்பன் – பாரதி பேரன் – இரத்தம் கொதிக்க என் இடத்திற்கு ஓடி வந்து, “டேய்! இன்னிக்கு மத்யானமே இந்த ப்ளட் கேம்ப்க்கு நாம ரெண்டு பேரும் போறோம், ரெடியாரு” என்றான்.
நான் அதற்கு, “ஓங்கி ஒண்ணு விட்டேன்னு வச்சுக்கோ வாய் வெத்தல பாக்கு போட்டுக்கும்” என்றேன்.
“டேய்! தொட நடுங்கி, ஒழுங்கா மரியாதயா வந்துடு அவ்வளவுதான்” என்றான்.
“போடா ஃபூல்”
“உடம்புக்கு நல்லது டா டொனேட் பண்ண பண்ண….அப்புறம் பாரதி சொன்ன மாரி ‘இன்று புதிதாய் பிறந்தோம்’ ங்கிற மாரி நம்ம ஒடம்புல புது ரத்தம் பாய ஆரம்பிச்சிடும் டா….ஃப்ரெஷ்ஷா ஆயிடும்” என்று என்னை ஒருவாறு சம்மதிக்க வைத்தான்.
“அப்பா சாமி, நான் புதுசா கல்யாணம் ஆனவன்….உனக்கு ட்ரைவர் வேல வேண்ணா பாக்கறேன்….என்னால தானமெல்லாம் பண்ண முடியாது” என்றேன் ஒரே பிடிவாதமாக.
“சரி வந்து தொல….இந்த வாட்டி அங்க வந்து பார்த்தா அடுத்த தடவ நீயே டொனேட் பண்ணுவ”
“என்னால முடியாது பா….நான் தான் ஒன்ட முன்னயே சொல்லிருக்கேன்ல….என்ன டிஸ்டர்ப் பண்ணாத….ஒன்ன ட்ராப் பண்றேன்ல அதுக்கே நீ சந்தோஷப்பட்டுக்கணும் சொல்லிட்டேன்….” என்றேன்.
நான் ஒருமுறை அப்பல்லோ, நந்தனம்க்கு இரத்த தானம் பண்ணுவதற்காக சென்றிருந்தேன். அங்கே பாட்டிலில் இரத்தம் எடுக்க எடுக்க எனக்கு பீ.பி. அதிகம் ஆகி மயக்கம் போட்டுவிட்டேன். அப்புறம் இரத்த தானம் செய்ய வந்த எனக்கு யாரோ இரத்தம் வழங்கி உயிர் பிச்சைப் போட்டார்கள். அன்று முதல் இரத்த தானம் என்றாலே எனக்கு குடலை என்னமோ செய்வது போல இருக்கும்.
“ஒனக்கு ஒண்ணு தெரியுமா, O-ve பிளட்டுக்காக என் ஃப்ரெண்ட் ஒருவாட்டி அண்ணா நகர்லேந்து மைலாப்பூர் வரைக்கும் தெரு தெருவா அலையாத கொறையா அலஞ்சுருக்கான் தெரிஞ்சுக்கோ…..அப்போ ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் நான் டொனேட் பண்ணிருந்தேன்….அதனால அவன் ஃபாதருக்கு கொடுக்க முடியல….அவ்வளவு டிமாண்ட்…..சும்மா இல்ல”
அப்புறம் அன்று மதியம் நானும், என் நண்பனும் இரத்த தானத்திற்கு சென்றிருந்தோம். அது ஒரு பெரிய செவ்வகக் கூடம். கூடம் முழுமைக்கு சேர்த்து ஒரு பெரிய ராட்சஸ
சாண்டிலியர் ஒன்று நடுவாந்திரமாக தொங்கி கொண்டிருந்தது. பெரிய கூடமாகையால் கூட்டம் பெரியதாகத் தெரியவில்லை. நான் ஒரு மூலையில் சென்று அமர்ந்து கொண்டேன். நண்பன் இரத்த தானம் வழங்க இருந்த கும்பலுடன் ஐக்கியமானான். அவனுக்கு ஒரு காகிதம் கொடுத்து அவன் வரலாறை நிரப்பிக் கொடுக்குமாறு கேட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் இது வழக்கம் தானே! பேனாவை எடுத்து காகிதம் ஒன்றில் ஏறக்குறைய 10 நிமிடம் எழுதிக் கொண்டே இருந்தான். 7-8 அறைகள் இருந்தன தானம் வழங்குவதற்கு. இவன் 30நிமிடம் கிட்ட காத்திருந்து இரத்தம் தானம் செய்ய ஓர் அறைக்குச் சென்றான். சென்றவன் சென்ற மாத்திரத்திலேயே வெளியேறினான்.
என்னை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவன் என் அருகாமையில் வர வர ஏதோ தவறு நடந்தது போல் என மனதிற்கு புரிந்தது. என் முன்னே வந்து நின்றவன் இரத்தம், ‘சாம்பார்’ போல் கொதிப்பதை உணரமுடிந்தது.
“என்னடா என்ன ஆச்சு? எதாச்சும் ப்ராப்ளமா?” என்றேன்.
கொஞ்ச நேரம் பேசாமல் நின்று கொண்டிருந்தான். சிறிது அவகாசம் எடுத்து சொல்ல ஆரம்பித்தான்.
“டேய்! உள்ள போனேன்டா….நான் எந்த கன்ட்ரீன்னு கேட்டான்டா அங்க இருந்தவன்….இண்டியா, நான் இண்டியன்னு சொன்னேன்…எவ்வளவு வருஷமா யூ.எஸ் ல இருக்கன்னான்…..ஒரு பத்து மாசமான்னேன்…..அப்பன்னா நீ ப்ளட் டொனேட் பண்ண முடியாது….” என்று மூச்சு விடாமல் சொல்லிக் கொண்டேயிருந்தான்.
“ஏன்டா?” என்று குறுக்கிட்டேன்.
“இண்டியா மாரி கன்ட்ரீஸ்லாம் மலேரியா அஃபெக்டட் கன்ட்ரீஸாம்….கொறஞ்சது ஆறு வருஷமாவது யூ.எஸ். ல இருந்திருந்தா தான் ப்ளட் டொனேட் பண்ண அலவ் பண்ணுவாங்களான் டா…ரொம்ப டிஜெக்டட் ரா மச்சி” என்று சொன்னான் பாரதி பேரன்.
நானும்தான்!

2 comments
Comments feed for this article
ஜூலை 29, 2009 இல் 1:48 பிற்பகல்
jothi
what can we do! what can we expect from that country except money and for that only we are going there. please come back to india after your period.
ஜூலை 30, 2009 இல் 2:56 பிற்பகல்
thisuba
Jothi,
Thanks for your comment. I’ll definetly come back!
Thanks Again,
This.Su.Ba